
தமிழகத்தில் இன்று எட்டு மாவட்டங்களில், வெயில் அளவு, இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருக்கும் என்றும் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், சூறைக்காற்று வீசும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழை பொய்த்துப் போனது. பெரும்பாலான் மாவட்டங்கள் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. பல இடங்களில் குடிநீருக்காக பொது மக்கள் குடங்களை தூக்கிக் கொண்டு அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் தற்போது கோடை வெயில் உச்சகட்டத்தை நெருங்கியுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில், வெயிலின் அளவு, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல், அதாவது, 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் சென்றுள்ளது. வெப்பநிலை அதிகரிப்பால், கடல் சீற்றம் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், இன்றைய வானிலை நிலவரம் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள, முன் எச்சரிக்கை அறிவிப்பில், : கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலுார், திருச்சி, சேலம், அரியலுார் ஆகிய எட்டு மாவட்டங்களில், வழக்கமான வெயிலை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருக்கும் என்றும் அதாவது வெப்பநிலையை பொறுத்தவரை, 41 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
மதுரை, சிவகங்கை, நீலகிரி, கோவை, விருதுநகர் உள்பட, 15க்கும் மேற்பட்ட உள் மாவட்டங்களில், சூறை காற்று வீசும் என்றும், சில இடங்களில், இடியுடன் கூடிய வெப்பச்சலன மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.