கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவரும் மேம்பாலத்தில் இருந்த டிரம் கவிழ்ந்ததில் பாலத்தின் கீழ் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது தார் கொட்டியதால் பாதிப்புக்குள்ளாயின.
கோவை காந்திபுரம் 100 அடி சாலையிலிருந்து ராமகிருஷ்ணா மருத்துவமனையைத் தாண்டி ஆவாரம்பாளையம் சந்திப்பு வரை செல்லும் மேம்பால கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றன. இதன் முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்து, தற்போது இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன.
அங்கு தார் சாலை போடுவதற்காக லாரி மூலமாகத் தார் கொண்டுவரப்பட்டிருந்தது. நேற்று மதியம் மேம்பாலப் பணியில் இருந்த லாரியை, ஓட்டுநர் பின்பக்கமாக இயக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாகப் பாலத்தின் பக்கவாட்டுச் சுவரோரம் வைக்கப்பட்டிருந்த டிரம் மீது லாரி மோதியதால், டிரம் பக்கவாட்டில் கவிழ்ந்தது.
கவிழ்ந்த டிரம்மிலிருந்து வெளியேறிய சூடானா தாரானது பாலத்தின் கீழே சாலையில் சென்றுகொண்டிருந்த கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மற்றும் பாலத்தின் கீழே நடந்து சென்ற பொதுமக்கள் மீதும் சிதறியது. இதில் 10 கார்கள் முற்றிலும் நாசமானது.
ஆத்திரமடைந்த கார் உரிமையாளர்கள் சாலை நடுவிலேயே கார்களை நிறுத்திவிட்டு நெடுஞ்சாலைத் துறை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கே போக்குவரத்து தடை ஆனது. பின்னர் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போக்குவரத்தைச் சீராக்கினர். சேதமடைந்த வாகனங்களைச் சரி செய்யத் தேவையான தொகையைத் தருவதாக நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்கள் ஒப்புக்கொண்டதையடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.