அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா, மாத்திரை சாப்பிடுவதற்கு அடம் பிடிப்பார் என அங்குள்ள செவிலியர்கள் கூறினர்.
கடந்த மாதம் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்ட பிறகு மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாசந்தி பால் விரும்பிச் சாப்பிட்டார்'' என்று அப்பல்லோ மருத்துவமனை ஊழியர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை செவிலியர்கள் கூறுகையில், கடந்த செப்டம்பர் 22ம் தேதி உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்து, உடல் நலன் தேறி சிறப்புப் பிரிவுக்கு கடந்த நவம்பர் 19ம் தேதி மாற்றப்பட்டார்.
அவரது சிகிச்சைக்கு 16 செவிலியர்கள் உறுதுணையாக இருந்தனர்.
சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்ட பிறகு உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உணவை தாமே எடுத்துச் சாப்பிடத் தொடங்கினார் ஜெயலலிதா.
சிறப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்ட பிறகு, திரைப்படங்களின் பழைய தமிழ்ப் பாடல்களைக் கேட்பார். தினமும் 1 மணி நேரம் தொலைக்காட்சி பார்த்தார். "தாம் உடல் நலம் பெற லட்சக்கணக்கானோர் பிரார்த்தனை செய்வதை தொலைக்காட்சியில் பார்த்து ஜெயலலிதா நெகிழ்ந்தார்.
பிசியோதெரபி சிகிச்சையின் ஒரு பகுதியாக பந்து எறிந்து விளையாடுவதிலும் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டார். ஜெயலலிதா. பயிற்சிகள் செய்வதில் தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும்கூட, உடல் நலனுக்காக அதை அவர் செய்ய மறுப்பதில்லை.
ஆனால், மாத்திரை மருந்துகள் கொடுக்கும்போது, “எனக்கு என்ன ஆச்சு. நல்லா தானே இருக்கேன். ஏன் இப்படி டார்ச்சர் தர்றீங்க… கெட் லாஸ்ட்” என கோபப்படுவார்.
பின்னர், அவரே சமாதானமாகி, எங்களை அழைத்து அன்பாக பேசி, அந்த மாத்திரைகளை சாப்பிடுவார். தனது அறைக்குள் யார் நுழைந்தாலும் ஜெயலலிதா புன்முறுவல் செய்து "தாங்களுக்கு நான் ஏதாவது உதவ வேண்டுமா' எனக் கேட்பார் என்றனர்.