
ரேஷன் கடைகள் :
ரேஷன் பொருட்களை தங்கு தடையின்றி வாங்குவதற்கு வசதியாக மாதந்தோறும் முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக முதல், இரண்டாவது வெள்ளிக்கிழமைகளில் நிியாயவிலை கடை ஊழியர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம், அரிசி வாங்கும் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. அதன் காரணமாக அந்த மாதத்துக்கான அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தாமதமாக தொடங்கியது. ஜனவரி மாதத்துக்கான பொருட்களை அந்த மாதம் முடிவதற்குள் அளிக்க வேண்டும் என்பதால், வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையும் (ஜனவரி 30) ரேஷன் கடை ஊழியர்கள் பணிக்கு வர வேண்டியதானது.
இன்று விடுமுறை :
அதன்படி, ஜனவரி 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பணிபுரிந்த ஊழியர்களுக்கு மாற்று விடுப்பும் இதுவரை வழங்கப்படாமல் இருந்தது. இதனையொட்டி தற்போது அவர்களுக்கு இன்று ( மார்ச் 19 ) மாற்று விடுமுறை வழங்கப்படுவதாக கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. இதனால் இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.