Ayodhya mandapam case: அயோத்தி மண்டப வழக்கு… இந்து சமய அறநிலையத்துறை உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!!

By Narendran SFirst Published Apr 27, 2022, 5:52 PM IST
Highlights

அயோத்தி மண்டபத்தை தமிழக இந்து சமய அறநிலையத்துறை எடுத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அயோத்தி மண்டபத்தை தமிழக இந்து சமய அறநிலையத்துறை எடுத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீ ராம் சமாஜ் என்ற அமைப்பின் மூலம் அயோத்தி மண்டபம் 1954 ஆம் ஆண்டு கட்டப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வந்தது. அந்த அமைப்பு நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தது. இந்த நிலையில், அயோத்தி மண்டபத்தை கடந்த 2013ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கீழ் கொண்டுவந்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, ஸ்ரீ ராம் சமாஜம் அமைப்பு சார்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் கடந்த வாரம் தனி நீதிபதி வி.எம். வேலுமணி விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவில் ஸ்ரீ ராம் சமாஜ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். அதோடு அந்த மண்டபம் யாருக்கும் சொந்தமானது கிடையாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதை யாரும் உரிமை கொண்டாட முடியாது. அதனால் இந்து அறநிலையத்துறை இதை கையகப்படுத்த வேண்டும். அவர்கள் இதை கட்டுப்படுத்த வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஸ்ரீ ராம் சமாஜ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. கடந்த வழக்கில் இதில் எந்த விதமான இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கடந்த அமர்வில் உயர்நீதிமன்றம் கூறியது. இந்த வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு விசாரணை நடத்தியது. இன்றைய அமர்வில் அயோத்யா மண்டபம் நிர்வாகத்தை தமிழ்நாடு சமய அறநிலையத்துறை எடுத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை உறுதிபடுத்திய தனி நீதிபதி உத்தரவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவிலை நிர்வகிக்க அறநிலையத்துறை அதிகாரி நியமிக்கப்பட்ட உத்தரவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் அறநிலையத்துறை புதிதாக விசாரணையை தொடங்கி, அனைத்து தரப்பு விளக்கத்தையும் கேட்ட பின்னர் சட்டத்திற்குட்பட்டு புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். சங்கங்களின் கீழ் பதிவு செய்த ஸ்ரீ ராம் சமாஜ்ஜை கோவில் என்ற வரையறைக்குள் கொண்டு வர முடியாது. ஆகம விதிகள் படி தினசரி பூஜைகள் நடத்தப்படவில்லை. 2004ல் அளிக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை எடுக்காமல் கைவிட்ட நிலையில், 2013ல் அதே புகார்தாரரால் அளிக்கப்பட்ட அதே புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதோசம் மற்றும் ராம நவமி பூஜைகள் மட்டுமே அயோத்யா மண்டபத்தில் நடத்தப்படுகிறது. சிலைகளை வைத்து பக்தர்களை பூஜிக்க வைத்து தட்சனை பெறுவதை அறநிலையத்துறை இந்த வழக்கில் நிரூபிக்கவில்லை. எனவே இதை அறநிலையத்துறை கீழ் கொண்டு வர முடியாது. அதே சமயம் ஸ்ரீராம் சமாஜத்துக்கு எதிரான புகார் குறித்து புதிதாக விசாரணையை தொடர தமிழக அரசுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

click me!