வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்பு உள்ளதால் தமிழக கடலோர மாவட்டங்களில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு போக வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் நிலை கொண்டிருந்த ‘ஒகி‘ புயல் காரணமாக தென் தமிழகம் மற்றும் கேரளாவில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. கேரளா மற்றும் தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியில் விமானப்படை, கடற்படை மற்றும் கடலோர காவல்படை தீவிரமாக இறங்கி உள்ளது.
இந்த நிலையில், வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவாகியுள்ள சாகர் என அழைக்கப்படும் புதிய புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வருவதால் வரும் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் சென்னை உட்பட வட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில் கனமழையுடன் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்பதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என ஆட்டோவில் ஒலி பெருக்கி வழியே மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதே போன்று திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் நாளை முதல் 4 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதே போன்று கடலூர் மாவட்டமும் சாகர் புயலால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் கடலூர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்