தீபாவளியன்னைக்கு இந்த 4 மாவட்டங்களில் கண்டிப்பா மழை பெய்யுமாம் ! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா ?

By Selvanayagam PFirst Published Oct 26, 2019, 7:49 AM IST
Highlights

தமிழகத்தில் தீபாவளியன்று அதாவது நாளை ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வடக்கு நோக்கி நகர்ந்து புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ‘கியார்’ என பெயரிடப்பட்டுள்ளது. மும்பைக்கு தெற்கு-தென்மேற்கே 380 கிலோ மீட்டரில், மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள இந்த புயல், அடுத்த 5 நாட்களுக்கு மேற்கு-வடமேற்கு திசையில் நகரும். இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாகவும், அதற்கடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாகவும் மாறும்.

இதேபோல, கடலோர ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிசாவை ஒட்டி, மேற்குமத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்தடுத்த நாட்களில் கடலோர கர்நாடகம், மும்பை, கோவா, ஒடிசா, அசாம், மேகாலயா உள்ளிட்ட பகுதிகளில் பரவலாகவும், கனமழைக்கும் வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே, மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்து விட்டதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

சென்னையில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.வரும் 27ஆம் தேதி வெப்பச்சலனம் காரணமாக ஈரோடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 28, 29ஆம் தேதிகளில் தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

click me!