Tamilnadu rain | உஷார்… 5 மாவட்டத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை… எச்சரிக்கும் வானிலை மையம்!!

By Narendran SFirst Published Nov 25, 2021, 4:13 PM IST
Highlights

#TamilnaduRain | அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். 

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காற்றழுத்த உந்துதல் குறைவாக இருந்ததால் அழுத்தம் ஏற்படாமல் தாழ்வு பகுதி உருவாகவில்லை என்றும் காற்று சுழற்சி காரணமாக மட்டுமே தற்போது கனமழை பெய்து வருவதாகவும் கூறினார். மேலும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், இராமநாதபுரம், திருநெல்வேளி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று கூறிய அவர், கடலூர், அரியலூர், கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்தார்.

நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி, மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியசாகவும் குறைபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசையொட்டியும் இருக்கும். நாளை ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவாக இராமேஸ்வரம் 8 செ.மீ, திருப்பூண்டி, திருகுவளையில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

குமரி கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீச வாய்ப்புள்ளதால் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிற்கும் வரை தென் தமிழகத்தில் மழை தொடரும் என்று குறிப்பிட்ட அவர், 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் 29 ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என ஏற்கனவே கூறப்பட்டுள்ள நிலையில் இது உருவான அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என்றும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகத்திற்கு வர வாய்ப்புள்ளதா என்பதை இனி வரும் நாட்களில் தான் காண முடியும் என்றும் தெரிவித்தார்.

click me!