ஆட்சியருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஜோதிமணி..! கரூரில் பரபரப்பு ..!

By Thanalakshmi VFirst Published Nov 25, 2021, 3:56 PM IST
Highlights

கரூரில் மாற்றுதிறனாளிகளுக்கு முகாம் நடத்த பலமுறை கோரிக்கை வைத்தும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் கரூர் மக்களவை தொகுதி உறுப்பினர் ஜோதிமணி எம்.பி தர்ணாவில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான என்னை மக்கள் பணி செய்யவிடாமல் தடுக்கும் கரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டதை துவங்கியுள்ளாதாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதால் சர்ச்சை வெடித்துள்ளது.

தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட ஜோதிமணி செய்தியாளர்களிடம் கூறுகையில் , ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வழங்குவதற்கான மத்திய அரசின் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் முதியவர்கள் தங்களின் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள முகாமில் கலந்துகொண்டு மருத்துவ சான்று பெற்று அவர்களுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என கூறினார். மேலும் கல்வி உதவித்தொகை, தொழில் தொடங்க கடனுதவி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சேருவது, உதவி உபகரணங்கள் பெறுவது, சக்கர நாற்காலி, பெட்ரோல் ஸ்கூட்டர், மூன்று சக்கர வண்டி, ஊன்றுகோல் கருவி, செயற்கை கால் மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் பதிவு செய்தல் மற்றும் பிற உதவிகள் இந்த முகாமில் வழங்கப்படும்.

இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் இந்த முகாமை ஒவ்வொரு இடத்திலும் நடத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் தொடர்ந்து பலமுறை வலியுறுத்தினேன். ஆனால் அவர் முகாமை நடத்த மறுத்து விட்டார். பிற மாவட்ட கலெக்டர்கள் இந்த முகாமை நடத்த ஒத்துழைப்பு கொடுத்து வரும் நிலையில், கரூர் மாவட்ட கலெக்டர் இதற்கு மறுத்து வருகிறார் என தெரிவித்தார். மேலும் , மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தி உதவிகளை வழங்க வேண்டும் எனவும் அதற்கான தேதியை வழங்கும் வரையில் இந்த போராட்டத்தை தொடர்வேன் என்றும் ஜோதிமணி கூறினார்.

மேலும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ஒன்றிய அரசின் சமூக நீதி அமைச்சகத்திடம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க ADIP முகாம் நடத்த வேண்டும் என்று கேட்டு பெற்றுவந்தேன் எனவும் கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல்,திருச்சி, புதுக்கோட்டை ஆட்சியர்கள் முகாம் நடத்தும்போது ஏன் கரூர் மாவட்ட ஆட்சியர் நடத்தவில்லை? என கேள்வியெழுப்பிள்ளார். மேலும் இதே முகாமை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து நடத்தியுள்ளார் என கூறிய அவர் கரூர் தமிழ்நாட்டில் தானே உள்ளது? என கேள்வியெழுப்பியுள்ளார்.

இதே போன்று கடந்த பிப்ரவரி மாதம், கரூரில் அனுமதியின்றி தர்ணாவில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்து பரபரப்பை ஏற்படுத்தியது. லைட் ஹவுஸ் கார்னரில் 70 ஆண்டுகளுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி அமைத்த காந்தி சிலையை அகற்றி புதிய சிலையை வைத்ததை கண்டித்து ஏராளமான காங்கிரஸார் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி போலீசார் அறிவுறுத்தினர். எனினும் போராட்டம் நீடித்ததால் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான என்னை மக்கள் பணி செய்யவிடாமல் தடுக்கும் கரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ,கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டதை துவங்கியுள்ளேன். pic.twitter.com/keOWHFMwRY

— Jothimani (@jothims)
click me!