
வெப்பச் சலனம் காரணமாகவும், தென் மேற்கு பருவ மழை காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் நெல்லை ஆகிய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள 5 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் இறுதியில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. கிட்டத்தட்ட முன்கூட்டியே தொடங்கிய இந்த தென் மேற்கு பருவ மழையால் நீலகிரி, கோவை மற்றும் நெல்லை மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை கொட்டி வருகிறது.
கோவையில் நேற்று இரவு தொடங்கிய மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. வால்பாறை பகுதியில் கடந்த 5 நாட்களாக கனமழை மழை கொட்டி வருகிறது. இதனால் கோவை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுளளது.
தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குமுளி, தேக்கடி உள்ளிட்ட கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர், கூடலூர், தேவாலா, பந்தலூர், குந்தா போன்ற பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அங்கும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
இதே போன்று நெல்லை மாவட்டத்திலும் தென்காசி, கெங்கோட்டை, களக்காடு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் நெல்லை ஆகிய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள 5 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.