
திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டது குறித்து தமிழக உள்துறை செயலாளர், சென்னை காவல் ஆணையர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில் ஈழத் தமிழர்கள் பலர் இலங்கை ராணுவத்தால் கொலை செய்யப்பட்டனர்.
குண்டுகளை பயன்படுத்தக் கூடாது என்ற விதியையும் மீறி தமிழர்கள் அதிகம் வசித்த பகுதிகளான யாழ்ப்பானம், திரிகோணமலை, மன்னார், வன்னி மற்றும் கிளிநொச்சி உள்ளிட்ட இடங்களில் குண்டுகளை வீசியது இலங்கை ராணுவம்.
இந்த இனப்படுகொலையை நினைவு கூறும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படுவது உண்டு.
ஆனால் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு பதவியேற்ற பிறகு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தடையையும் மீறி நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த மே 17 இயக்கத்தினர் கடந்த 17 ஆம் தேதி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். அப்போது காவல்துறைக்கும் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் திருமுருகன் காந்தி, இளமாறன், டைசன், அனுன் குமார் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றத்தில் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்துக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் செல்வம் மற்றும் கலையரசன், இந்த வழக்கு குளில் திருமுருகன் காந்தி, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறித்து தமிழக உள்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
மேலும், ஏற்கனவே கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட வழக்கில் உள்நோக்கம் கொண்டு மீண்டும் திருமுருகன் காந்தி கைது செய்திருப்பது குறித்து தமிழக உள்துறை செயலாளர், சென்னை காவல் ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.