முதல்வர் படத்தை நெஞ்சில் வைத்தபடி மாற்றுத்திறனாளி தற்கொலை…

First Published Dec 16, 2016, 10:08 AM IST
Highlights


கடத்தூர்,

முதல்வர் ஜெயலலிதா இறந்த சோகத்தில், அவரது படத்தை நெஞ்சில் வைத்தபடி மாற்றுத்திறனாளி ஒருவர் விசம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

நம்பியூர் அருகேயுள்ள அக்கரை பாளையத்தைச் சேர்ந்தவர் முத்தான். இவருடைய மனைவி மாராள். இருவரும் கூலித் தொழிலாளர்கள். இவர்களுடைய மகன் பழனிச்சாமி (41). மாற்றுத்திறனாளி. திருமணம் ஆகவில்லை.

மாற்றுத்திறனாளி உதவித்தொகை வருமானத்தில் தன் பெற்றோருடன் வசித்து வந்தார் பழனிச்சாமி. மேலும், இவர் அ.தி.மு.க. உறுப்பினராக இருந்து வந்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த நாளில் இருந்தே பழனிச்சாமி ஆழ்ந்த சோகத்தில் மூழ்கி இருந்தார்.

மேலும், அந்த பகுதியில் கடந்த 9-ஆம் தேதி நடந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மௌன அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊர்வலமும் சென்றார். அதுமட்டுமின்றி மொட்டை அடித்து, முதல்வருக்கு தனது அஞ்சலியை செலுத்தினார்.

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு குறித்த செய்திகளை அடிக்கடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்த்துவிட்டு தனது குடும்பத்தினரிடமும், அக்கம் பக்கத்தினரிடமும் ‘அம்மா இறந்து விட்டாரே, அம்மா இறந்து விட்டாரே’ என்று கூறி அழுது புலம்பியுள்ளார்.

மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்த பழனிச்சாமி புதன்கிழமை அன்று, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விசம் குடித்துவிட்டு ஜெயலலிதா உருவப்படம் பொறித்த காலண்டரை தனது நெஞ்சில் வைத்தபடி மயங்கி கிடந்தார்.

இதை கவனித்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே பழனிச்சாமி இறந்து விட்டனர் என்ற தகவலைத் தெரிவித்தனர்.

இதுகுறித்து சிறுவலூர் காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் பழனிச்சாமியின் வீட்டுக்குச் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தியும், அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறினர்.

tags
click me!