
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம், அரசு பணிகளின் அடிப்படையில் குரூப்-1, குரூப்-2, 2ஏ, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு வகையான தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகள் கொரோனா பரவல் காரணமாக அரசு போட்டி தேர்வுகள் நடைபெறவில்லை.
இதையடுத்து தொற்று பரவல் தற்போது படிப்படியாக குறைந்து வருவதால் அரசு தேர்வுகளை நடத்த முடிவெடுத்து குரூப்-2 மற்றும் குரூப்-4 தேர்வுகள் தொடர்பான அறிவிப்பு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி டிஎன்பிஎஸ்சி தலைவர், 5,831 காலிபணியிடங்களுக்கான குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் எப்போது நடைபெறும் ? என்பது குறித்த முழு விவரங்களையும் வெளியிட்டார்.
அதன்படி மே 21-ஆம் தேதி குரூப்-2 மற்றும் குரூப்-2A தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு பிப்.23 முதல் மார்ச் 23 வரை விண்ணப்பிக்கலாம். மொத்த உள்ள 200 மதிப்பெண்களில் 100 மதிப்பெண்களுக்கு தமிழில் தேர்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தற்போது திருத்தப்பட்ட புதிய தேர்வு காலஅட்டவணையை இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிட்டுள்ளது. அதில்கூடுதலாக, தேர்வு எந்த மாதத்தில்நடத்தப்படும், அதன் முடிவுகள் எந்த மாதம் வெளியிடப்படும். நேர்காணல், கலந்தாய்வு எப்போது நடத்தப்படும் ஆகிய விவரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.