
திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து அரசு அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்துவருகிறது. அதற்கு பாராட்டும் விமர்சனமும் ஒருசேர எழுந்தது. சமீபத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணிட மாற்றம் செய்வதற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்றது தமிழ்நாடு அரசு. அதற்காக ஆணையும் வாங்கி வந்து வெற்றிக்கரமாக அவரை இடமாற்றமும் செய்துவிட்டது. தற்போது திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
நகராட்சிகளின் இயக்குநராக இருந்த அம்ரீத்தை அந்த பதவிக்கு மாற்றப்பட்டார். அவர் தான் தற்போதைய நீலகிரி மாவட்ட ஆட்சியர்.யானை வழித்தடங்களை மறித்து ரிசார்ட்டுகள் கட்டப்பட்டிருந்ததை எதிர்த்து வந்ததால், இன்னசென்ட் திவ்யாவை முக்கிய அமைச்சர் ஒருவரின் உதவியுடன் ரிசார்ட் ஓனர்கள் இடமாற்றம் செய்ய வைத்துள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.கட்சி தலைமைக்கு கட்டுப்படாதவர்களும், கட்சியினருக்கு எதிராக செயல்படும் அரசு அதிகாரிகள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டும் நிலவி வருகிறது.
இந்நிலையில், தற்போது மேலும் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையராக இருந்த பணீந்திர ரெட்டி வணிகவரித் துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். அதேபோல வணிகவரித் துறை ஆணையராக இருந்த சித்திக் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.