
அரசு மருத்துவமனையில் உடனே வேலை இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சிறப்பு பிரிவு டாக்டர்களுக்கு, தமிழக அரசு, சிவப்புக் கம்பளம் விரித்துள்ளது. இதில், 414 டாக்டர்கள் தேர்வு செய்யவுள்ளனர்.
தமிழக அரசு மருத்துவமனைகளில், எம்.பி.பி.எஸ்., படித்த டாக்டர்கள் புதிதாக சேர்க்கப்பட்டாலும், எம்.எஸ்., எம்.டி., என்ற முதுநிலை பட்டம் பெற்ற, அறுவை சிகிச்சை சார்ந்த சிறப்பு டாக்டர்கள் போதிய அளவில் இல்லை. அதனால், சிறப்பு பிரிவு டாக்டர்களை, கூடுதலாக தேர்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து மயக்கவியல் - 91; பொது மருத்துவர் - 30; மகப்பேறு மருத்துவர் - 130, ரேடியாலஜி - 22 பேர் உட்பட, 414 சிறப்பு பிரிவு, உதவி அறுவை சிகிச்சை நிபுணர்களை தற்காலிக பணியில் நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது. இத தொடர்ந்து, எம்.ஆர்.பி., எனப்படும் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த டாக்டர் வேலைக்கு நேரில் வந்து, நேர்முக தேர்வில் கொண்டால் போதும். உடனே வேலையில் சேரலாம். இதற்கு, நவம்பர் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், உயர் சிறப்பு மருத்துவம் படித்தவர்களுக்கு பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. எதிர்பார்த்ததை விட சம்பளமும் கிடைக்கிறது. இதனால், அரசு பணியில், யாரும் ஆர்வம் காட்டுவது இல்லை.
இதனை உணர்ந்த அரசு, நேரில் வந்தால் வேலை என்ற சிவப்பு கம்பளத்தை விரித்துள்ளது. இதற்கு உரிய பலன் கிடைக்குமா என பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்றனர்.
இதுதவிர, முதுநிலை மருத்துவம் படித்து, அரசு மருத்துவமனைகளில் நிபந்தனை அடிப்படையில் பணியாற்றி வரும், 1,800 டாக்டர்களையும், அரசு பணி வரன்முறை செய்யவுள்ளது.