தமிழகத்தில் மதமாற்றம், பயங்கரவாத ஊடுருவல், வெளிநாட்டு பணம்! தி.மு.க. அரசை திணறடிக்கிறாரா கவர்னர் ?

By Ganesh RamachandranFirst Published Jan 18, 2022, 5:08 PM IST
Highlights

"அவர் நட்பை மதிக்காத போது நாம் மட்டுமே ஏன் நட்பு நட்பு என்று போக வேண்டும்? இந்த மாநிலத்தில் இருக்கும் பிரச்னைகளை ஆதாரங்களோடு பட்டியலிட்டு உளவுத்துறையிடம் தந்துவிடுவோம்"

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தி.மு.க. அரசின் மீது அதிருப்தியுற்ற நிலையில் மத்திய உள்துறைக்கு ஒரு ஸ்டிராங் அறிக்கையை இ.மெயிலில் அனுப்பியுள்ளதாகவும்! அதில், தமிழகத்தில் நடைபெறும்  மதமாற்றம், பயங்கரவாதிகள் ஊடுருவல், வெளிநாடுகளிலிருந்து பணம் குவிப்பு ஆகியன குறித்து குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில் கூடிய விரைவில் அமித்ஷாவின் துறை, தமிழக அரசை கேள்விக்கு உள்ளாக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் பரபரப்பு எழுந்துள்ளது.

அதாவது, தமிழகத்தின் புதியகவர்னராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, தி.மு.க. அரசுக்கு கடும் கெடுபிடியாக இருப்பார்! என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையில் நல்ல புரிதல் உருவானது. டெல்லிக்கு சென்ற போதெல்லாம் தி.மு.க. அரசை பற்றி நல்ல ரிப்போர்ட்டே தந்தார் கவர்னர். அதேப்போல, சட்டமன்றம் துவக்க நாளில் தனது உரையின் போதும் தமிழக அரசை மிகப்பெரிய அளவில் பாராட்டினார்.

இதெல்லாம் முதல்வருக்கு சந்தோஷம் என்றாலும், நீட் தேர்வு விஷயத்தில் கவர்னர் காட்டி வரும் கெடுபிடி அவருக்கு மத்திய அரசு மீது கடும் எரிச்சலை தந்தது. இதனை பிரதமர் மோடி உடனான வீடியோ கான்ஃபரன்ஸிங் மீட்டிங்கின் போது வெளிப்படையாக காட்டிவிட்டார் முதல்வர். பிரதமர் மற்றும் கவர்னரின் முன்னிலையிலேயே மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று குறிப்பிட்டார் ஸ்டாலின். இதை மிகப்பெரிய அவமதிப்பாக கருதுகின்றனர் மத்திய அரசின் பெரும்புள்ளிகளும், பா.ஜ.க.வினரும்.  இதனால் தி.மு.க. அரசுக்கு சரியான பாடத்தை புகட்ட நினைத்தனர்.

தமிழக கவர்னரிடம் இது பற்றி மத்திய அதிகாரிகள்  ஆலோசித்த போது “தமிழகத்தில் பொறுப்பேற்ற நாளில் இருந்து முதல்வர் ஸ்டாலினை நண்பராகவே பார்த்தேன், பழகினேன். ஒரு இடத்திலும்  அவரை நான் விட்டுத் தரவில்லை. ஆனால் தமிழக அரசு வெளியிட்ட எனது சட்டமன்ற உரையில், இறுதியில் நான் பேசிய ‘ஜெய்ஹிந்த்’ எனும் வார்த்தையையே இல்லை. முதல்வருக்கு தெரியாமல் இது நீக்கப்பட வாய்ப்பில்லை.

அதேபோல் தேசத்தின் பிரதமரை லைனில் வைத்துக் கொண்டு ‘ஒன்றிய அரசு’ என்று மத்திய அரசை அவர் அசிங்கப்படுத்திட முனைந்தது வரலாற்றுப் பிழை.

ஆக, அவர் நட்பை மதிக்காத போது நாம் மட்டுமே ஏன் நட்பு நட்பு என்று போக வேண்டும்? இந்த மாநிலத்தில் இருக்கும் பிரச்னைகளை ஆதாரங்களோடு பட்டியலிட்டு உளவுத்துறையிடம் தந்துவிடுவோம். அவர்கள் தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கட்டும்.’ என்று விரக்தியாக பேசியுள்ளார்.

click me!