மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை அரசு செலவில் அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை வரும் 20 ஆம் தேதி நடத்தப்படும் என நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் அடையாளம் காட்டப்பட்டார்.
மேலும் ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால் இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கபடுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஜெயலலிதா மரணம் அடைந்ததையடுத்து அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே புதைக்கப்பட்டது. இந்நிலையில், அங்கு ஜெயலலிதாவிற்கு அரசு செலவில் நினைவிடம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.
இதைதொடர்ந்து குற்றவாளிக்கு அரசு செலவில் நினைவிடம் எழுப்புவதா என பெரும்பாலான அரசியல் கட்சிகளிடையே விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
அதன்படி தந்தை பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்ட செயலாளர் சி.குமரன் உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், நாட்டு நலனுக்காக பல தியாகங்களை செய்த தலைவர்களுக்கு, அரசு சார்பில் சிலைகள், நினைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை, உச்ச நீதிமன்றம் குற்றவாளி என சுட்டிக்காட்டியுள்ளது.
அதனால் தமிழக அரசு சார்பில் அவருக்கு நினைவிடம் அமைப்பது எதிர்கால சந்ததியினருக்கு தவறான முன் உதாரணம் ஆகிவிடும்.
எனவே அவருக்கு மெரினா கடற்கரை மட்டுமல்லாமல், எந்த பொது இடத்திலும் நினைவிடம் அமைக்கக் கூடாது. அதே போன்று, அரசு அலுவலகங்களிலும் அவரது புகைப்படங்கள் வைக்கவும் தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இதுகுறித்து ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் வரும் 20 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போதே இந்த மனுவும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என வழக்கை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.