கடலூர்
இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 40 பேர் இறந்ததாக அரசு கூறுகிறது ஆனால், 200 பேர் பலியாகி உள்ளனர். எடப்பாடி அரசு தமிழக மக்களுக்கு பொய் தகவலை கூறி துரோகம் இழைக்கிறது என்று விருத்தாசலத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாசு குற்றம்சாட்டினார்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்திற்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு எம்.பி. வந்தார்.
அங்கு அவர் செய்தியாளர்களிக்கு அளித்தப் பேட்டி: “தமிழகத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக டெங்கு காய்ச்சல் உள்ளது. இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 200 பேர் பலியாகி உள்ளனர். ஆனால், அரசு 40 பேர் தான் இறந்ததாக கூறுகிறது.
இதுவரை 11 ஆயிரம் பேர்தான் பாதிக்கப்பட்டதாக அரசு கூறுகிறது. ஆனால், 30 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழக அரசுத் தொடர்ந்து பொய் கூறி மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. மக்களுக்கு உண்மையை கூறி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது.
மத்திய, மாநில அரசுகள் டெங்குவை கட்டுப்படுத்துவதில் மெத்தனமாக உள்ளது. இது மிகவும் தவறு. உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களை காப்பாற்ற வேண்டும்.
என்.எல்.சி. இந்தியா நிறுவனம் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தவில்லை. அதன் தலைமை முதல் கீழ் வரை ஊழல் நடந்துள்ளது. காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. ஒரு வாக்கி டாக்கி ரூ.40 ஆயிரம்தான். ஆனால், ரூ.2 இலட்சத்து 25 ஆயிரத்துக்கு வாங்கப்பட்டுள்ளது. அதுவும் தரமில்லாதது. ரூ.40 கோடிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதை ரூ.87 கோடிக்கு வாங்கியுள்ளனர். இந்த விசயத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள், காவல் துறை உயர் அதிகாரிகள் என அனைவருக்கும் தொடர்புள்ளது.
குட்கா விவகாரத்தில் ரூ.40 கோடி கையூட்டு வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை அதிகாரிகள் என அனைவருக்கும் தொடர்புள்ளது. மேற்கண்டவற்றிக்கு சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்” என்று அவர் குற்றம் சாட்டினார்.