
திருப்பூர் அருகே பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பேருந்தில் பயணம் செய்யவே மக்கள் அச்சப்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் அரசு தற்காலிக ஓட்டுனர்களை கொண்டு பேருந்துகளை இயக்கி வருகிறது.
மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களை அவர்களது மாவட்டங்களில் பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அதன்படி திருப்பூரில் பேருந்துகள் ஓட்ட தெரிந்தவர்களுக்கான தேர்வு நடைபெற்று ஆட்களை தேர்ந்தெடுத்தனர்.
அதில், தாராபுரத்தில் வருக்கி வியாபாரி கதிரேசன் என்பவரும் தேர்வு செய்யபட்டார். இவர் தாராபுரத்தில் இருந்து திருப்பூருக்கு அரசு பேருந்தை ஓட்டி சென்றுள்ளார்.
அப்போது திருப்பூர் ரோட்டரி கிளப் அருகே வரும்போது எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது பேருந்து பயங்கரமாக மோதியது. இதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.