ரொம்ப நாளா எதிர்பார்த்தது விரைவில் நடக்கப்போகுது! அரசின் வரவு, செலவு கணக்குகள் அனைத்தும் டிஜிட்டல் முறைக்கு மாற்றம்...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 24, 2018, 7:20 AM IST
Highlights

வரும் நவம்பர் மாதம் 1-ஆம் தேதிக்குள் அரசின் வரவு - செலவுக்கான பணிகள் அனைத்தும் டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் மாற்றப்பட உள்ளது என்று கருவூலம் மற்றும் கணக்குத் துறை முதன்மை செயலாளர் ஜவஹர் தெரிவித்தார்.
 

தேனி

வரும் நவம்பர் மாதம் 1-ஆம் தேதிக்குள் அரசின் வரவு - செலவுக்கான பணிகள் அனைத்தும் டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் மாற்றப்பட உள்ளது என்று கருவூலம் மற்றும் கணக்குத் துறை முதன்மை செயலாளர் ஜவஹர் தெரிவித்தார்.

'ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம்' குறித்த 'மாநில திறன் ஊட்டல் மாநாடு' நேற்று தேனி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னை கருவூலம் மற்றும் கணக்குத் துறை முதன்மைச் செயலாளரும், ஆணையாளருமான ஜவஹர் பங்கேற்றார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில், "இதுவரை ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தில் தமிழ்நாட்டில் 9 இலட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகள் டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் கணினி மயமாக்கப்பட்டு உள்ளன. 

அதேபோன்று, 7 இலட்சம் ஓய்வூதியர்களின் ஆவணங்களும்  டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கணினி மயமாக்கப்பட்டு உள்ளன. மேலும், அரசு துறைகளில் செலவு செய்யப்படும் முறைகளையும் கணினி மயமாக்கும் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன.

எலக்ட்ரானிக் கிளியரிங்க் சிஸ்டம் எனப்பட்ம் ஈ.சி.எஸ். மூலம் 'காலையில் பில், மாலையில் பணம்' என்ற மையக் கருத்தைக்கொண்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தொடர்பாக அரசுத் துறைகளில் 'பில்'களில் கையெழுத்திடும் அதிகாரத்தில் இருக்கும் ஊழியர்களுக்கு தக்க பயிற்சியளித்து வருகிறோம்.

இதன்படி, தமிழ்நாட்டில் ஒரு இலட்சம் பேருக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் நவம்பர் மாதம் 1-ஆம் தேதிக்குள் வரவு - செலவுக்கான பணிகளை டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது" என்றுத் தெரிவித்தார் ஜவஹர். 

click me!