தேனியில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு; கூட்டம் கூட்டமாக திரியுதாம்! உஷார் மக்களே!!!

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 24, 2018, 6:40 AM IST
Highlights

தேனியில் உள்ள வருஷநாட்டில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்களை வனத்துறையினர் பாதுகாப்போடு இருக்கும்படி அறிவுரை வழங்கியுள்ளனர். மேலும், "செல்பி எடுக்கிறேன் என்று யானைகளை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை உறுதி" என்றும் எச்சரித்துள்ளனர்.
 

தேனி

தேனியில் உள்ள வருஷநாட்டில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்களை வனத்துறையினர் பாதுகாப்போடு இருக்கும்படி அறிவுரை வழங்கியுள்ளனர். மேலும், "செல்பி எடுக்கிறேன் என்று யானைகளை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை உறுதி" என்றும் எச்சரித்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் உள்ளது வருஷநாடு. ஆண்டிப்பட்டி மலைத் தொடர் - மேகமலைத் தொடர் இடையே வடக்காக உள்ள பள்ளத்தாக்குப் பகுதியே வருஷநாடு. இப்பள்ளத்தாக்கின் உயர்ந்த பகுதியில் கோட்டைமலை உள்ளது. இம்மலையின் உயரம் 6 ஆயிரத்து 617 அடி. 

மூங்கில் ஆறு, சிற்றாறு, வைகை ஆறு முதலிய ஆறுகளில் இப்பள்ளத்தாக்கில் ஓடுகின்றன. 'வருஷநாடு' என்பதற்கு 'மழை மிகுந்த பகுதி' என்று பொருள். இங்கு கந்தகம், போன்றவை கிடைக்கும்.

வருஷநாடு வனச்சரகத்திற்குட்பட அரசரடி, மஞ்சனூத்து, உடங்கல் போன்ற மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஓடைகளில் நீரூற்று உண்டாகியது. இதனால், காடுகளும் பச்சைப் போர்த்தியதுபோல பசுமையாக இருக்கிறது. 

இந்த வனச்சரகத்தில் யானைகள் நடமாட்டம் ஏற்கனவே அதிகம். மழைப் பெய்து பசுமையாக காட்சியளிப்பதால் தற்போது பல்வேறு வனப்பகுதிகளில் இருந்தும் யானைகள் இங்கு கூட்டம் கூட்டமாக வருகைத் தருகின்றன.

அதனால், வருஷநாடு மற்றும் மேகமலை வனத்துறையினர் தீவிர காண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். "அரசரடி, இந்திராநகர், பொம்முராசபுரம் போன்ற மலைக் கிராம மக்களுக்கும், இம்மலைக் கிராமங்களுக்குச் செல்பவர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று வனத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர். 

பாதுகாப்பு கருதி மாலை 6 மணிக்குமேல் இப்பகுதிகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, "செல்பி எடுக்கிறேன் பேர்வழி என்று யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளனர் வனத்துறையினர். 

click me!