
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக அரசு வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
புதன்கிழமை வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என சட்டப்பேரவை சபாநாயகருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்தபோது விரைவில் பொதுக்குழு கூட்டி சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என எடப்பாடி தரப்பில் அறிவிப்பு வெளியானது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து டிடிவிக்கு ஆதரவாக 19 எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும் எடப்பாடியை நீக்க கோரி ஆளுநரிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் புதுச்சேரியில் உள்ள விடுதியில் ஒரு வாரத்திற்கும் மேலாக தங்கியிருந்தனர்.
ஆனால் இதுவரை எவ்வித முடிவும் ஆளுநர் வெளியிடவில்லை. இதனால் டிடிவி எம்.எல்.ஏக்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள கூர்கில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ளனர்.
இதைதொடர்ந்து எடப்பாடி தரப்பு கூறியபடி பொதுக்குழுவில் சசிகலாவையும் தினகரனையும் நீக்கி தீர்மானங்களை நிறைவேற்றினர்.
இந்நிலையில், எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து நடவடிக்கை எடுக்க தொடங்கிவிட்டது என நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதிக்க வேண்டும் என திமுக மற்றும் தினகரன் தரப்பு கோரிக்கையை ஏற்று வரும் புதன்கிழமை வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆலோசனை நடத்தி வருகிறார்.
முன்னதாக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், சபாநாயகர் தனபாலையும் சந்தித்தார்.