
ஈரோடு
ஈரோட்டில் கிட்னியை விற்று எனது கடனை அடை என்று மிரட்டும் கந்துவட்டிகாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடன் வாங்கிய பெண், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், வெண்டிபாளையம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வீதியைச் சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி பாரதி.
நேற்று ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவக்குமாரிடம், பாரதி புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.
அந்த மனுவில், "நான் மருத்துவ செலவுக்காக எனது பகுதியில் வசிக்கும் ஒருவரிடம் ரூ.1 இலட்சத்து 30 ஆயிரம் கடனாக வாங்கினேன். அதற்கு அவர் வாரந்தோறும் வட்டி செலுத்த வேண்டும் என்று கூறினார். அதன்படி நானும் வாரந்தோறும் ரூ.13 ஆயிரத்தை அவரிடம் வட்டியாக கொடுத்து வந்தேன்.
இதுவரை 11 வாரங்கள் தொடர்ந்து ரூ.13 ஆயிரத்தை கொடுத்து உள்ளேன். மேலும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவருக்கு நான் தினசரி வட்டியில் பணம் வாங்கி கொடுத்தேன். அவரும் முடிந்த வரை பணத்தை கட்டிவுள்ளார்.
இந்த நிலையில், அதிகமான வட்டி கேட்பதால் எங்களால் பணத்தை கட்ட முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், பணம் கொடுத்தவர் எனது வீட்டிற்கு வந்து மிரட்டுகிறார்கள்.
மேலும், கிட்னியை ரூ.10 இலட்சத்துக்கு விற்று அதில் ரூ.5 இலட்சத்தை கொடுத்து கடனை கழித்து விடுமாறும் கட்டாயப்படுத்துகிறார்.
எனவே, கந்துவட்டி கேட்டு மிரட்டும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.