
இராமநாதபுரம்
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு ஆயுதம் கொடுங்கள். இலங்கை கடற்படையினரிடம் இருந்து அவர்களை அவர்களே பாதுகாத்துக் கொள்வார்கள் என்று இயக்குநர் கௌதமன் ஆவேசமாக பேசினார்.
மீனவர்கள் பிரச்சனை பற்றி கேட்டறிவதற்காக திரைப்பட இயக்குனர் கௌதமன் நேற்று இராமேசுவரத்திற்கு வந்தார். பின்னர் அவர், மீனவர்களுடன் துறைமுக கடற்கரையில் ஆலோசனை நடத்தினார்.
விசைப்படகு மீனவர் சங்க தலைவர்கள் போஸ், யேசுராஜா, எமரிட், சகாயம் உள்ளிட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் மீனவர்கள் படும் துயரத்தையும், சிரமத்தையும் கௌதமனிடம் விளக்கினர்.
அதனைத் தொடர்ந்து கௌதமன் துறைமுகப் பகுதிக்குச் சென்று மீனவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்தும் படகு மற்றும் வலைகளை பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
“கடந்த மாதம் இராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்தும், மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தினர். அவர்களிடம் மத்திய அமைச்சர்கள் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, போராட்டத்தை கைவிடச் செய்து அவர்களை ஏமாற்றி விட்டனர்.
மீனவர்கள், வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த அதே நாளில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.நா.சபையில் தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டது குறித்தும், மீனவர் கொலைக்கு காரணமான இலங்கை கடற்படையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசியுள்ளேன்.
மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய இந்தியக் கடலோர காவல்படையும், தமிழக கடலோர காவல் படையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது.
கச்சத்தீவிலேயே நிரந்தரமாக கடற்படை முகாமையும் அமைத்து ஏராளமான இலங்கை கடற்படையினர் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.
மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல முடியாத அளவிற்கும், மீனவர்களை கைது செய்வதற்காகவும் கச்சத்தீவு அருகிலேயே இலங்கை கடற்படையினர் கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளனர்.
கச்சத்தீவையும், மீனவர்களின் மீன் பிடி உரிமையையும் மீட்டு தந்து மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள். அல்லது மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு ஆயுதங்கள் ஏந்திய பாதுகாப்பு கொடுங்கள். இல்லையென்றால் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு ஆயுதம் கொடுங்கள். அவர்களின் பாதுகாப்பை அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் கொண்டு வர விட மாட்டோம்.
கடந்த 20 நாட்களாக விவசாயிகள் டெல்லியில் அரை நிர்வாண கோலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வருகிற 25–ஆம் தேதிிராமேசுவரம் மினவர்கள் நடத்தும் கச்சத்தீவு பயண போராட்டத்தில் கலந்து கொள்வேன். இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஏராளமானோர் பங்கேற்பார்கள்” என்று அவர் கூறினார்.