பட்டா வழங்காமல் மூன்று ஆண்டுகளாக அலைகழித்ததால் ஆட்சியரகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி…

First Published Aug 30, 2017, 7:42 AM IST
Highlights
girl was trying to scorch for not giving patta for last three years...


அரியலூர்

அரியலூரில் வீட்டுமனைப் பட்டா வழங்காமல் மூன்று ஆண்டுகளாக அலைகழித்த அதிகாரிகளைக் கண்டித்து மாவட்ட ஆட்சியரகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சித்தார்.

அரியலூர் மாவட்டம், அடுத்த கடம்பூர் அருகேயுள்ள கோமான் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் மனைவி கமலா (40). இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு தான் குடியிருக்கும் வீட்டுக்கு மனைப்பட்டா கோரி விண்ணப்பித்து இருந்தார்.

இதனையடுத்து, 2014-ஆம் ஆண்டு இவருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கலாம் என தனித் துறை வட்டாட்சியர் பரிந்துரை செய்துள்ளார். ஆனால், இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.

பட்டா இல்லாததால் மின் இணைப்பு மற்றும் அரசின் இதர சலுகைகளை பெற முடியவில்லை என்றும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம், கடந்த மூன்று ஆண்டுகளாக மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கமலா வேதனை தெரிவித்தார்.

இதனால் விரக்தியில் இருந்த கமலா, மாவட்ட ஆட்சியரக அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க முயற்சித்தார். இதனைக் கண்ட அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளர்கள் அவரை தடுத்து நிறுத்தி ஆட்சியரிடம் அழைத்துச் சென்றனர்.

பின்னர், கமலா, ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதனைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் அதன்மீது ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

click me!