எல்லையை தாண்டினால் துப்பாக்கிதான் பேசும்… முன்னாள் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் அதிரடி பேச்சு!!

By Narendran SFirst Published Dec 1, 2021, 7:21 PM IST
Highlights

எல்லைப்பாதுகாப்பு படையினரின் தியாகத்தை போற்றும் தினமான இன்று தனது பணியின் அனுபவங்களை முன்னாள் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் முருகன் பகிர்ந்துக்கொண்டார். அது அனைவரையும் நெகிழ்சியடைய செய்தது. 

எல்லைப்பாதுகாப்பு படையினரின் தியாகத்தை போற்றும் தினமான இன்று தனது பணியின் அனுபவங்களை முன்னாள் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் முருகன் பகிர்ந்துக்கொண்டார். அது அனைவரையும் நெகிழ்சியடைய செய்தது. இந்திய எல்லை பாதுகாப்பு படை உருவாக்கப்பட்ட தினமான டிசம்பர் 1 ஆம் தேதியை எல்லைப்பாதுகாப்பு படையினரின் தியாகத்தை போற்றும் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் எல்லைப்பாதுகாப்பு படையினரின் தியாகத்தை போற்றும் தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் முருகன் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது, தான் இருபத்தைந்து ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றியதை பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் கூறிக்கொள்வதாகவும் காஷ்மீரில் பாதுகாப்பு பணி தனக்கு ஒதுக்கப்பட்டு உடனடியாக பொறுப்பேற்கும் படி சொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். தானும் சக வீரர்களும் முழங்கால் அளவு புதையும் பணியில் தங்களுக்கான துப்பாக்கி உள்ளிட்ட உபகரணங்களை சுமந்து கொண்டு மலை ஏற ஆரம்பித்ததாகவும் இரண்டு நாள் பயணம் என்பது எல்லோருக்கும் தெரியும் வழியில் பனிப்புயலை சமாளிப்பது எப்படி என்பதெல்லாம் விளக்கப்பட்டது. ஆனால் மலை ஏற ஏற சுவாசிப்பதுதான் பெரும் பிரச்னையாக இருந்தது என்றும் தனது அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், முதல் நாள் பயணத்தை முடித்துவிட்டு மறுநாள் பயணத்தை தொடர்ந்து முக்கால்வாசி துாரம் ஏறியபோது கடுமையான சுவாசப் பிரச்னை காரணமாக உடன் வந்த இளம் ராணுவ வீரரும் நண்பருமானவர் திடீரென சுருண்டு விழுந்து இறந்து போனதாகவும் இது மாதிரி சம்பவங்கள் ராணுவத்தில் நடப்பது சகஜம்தான் என்றாலும் தங்கள் அணியில் நடந்த போது அதிர்ச்சியாகவும் கவலையாகவும் இருந்ததாகவும் தெரிவித்தார். அந்த வீரரின் மரணம் சக வீரர்களுக்கு சோர்வை உண்டாக்கிவிடக்கூடாது என்பதற்காக அணித்தலைவர் படபடவென செயல்பட்டு கிடைத்த பொருட்களை வைத்து அவரது உடலை சுமந்து கொண்டு அடிவாரத்திற்கு கொண்டு செல்ல சிலரை பணித்துவிட்டு மற்ற வீரர்களுடன் முன்னோக்கி நடக்க ஆரம்பித்தார் என்றும் தாங்கள் சக வீரருக்காக கண்ணீரை சிந்திவிட்டு நாட்டைக் காக்க மேற்கொண்டு நடக்க ஆரம்பித்து தங்களுக்கான எல்லையை அடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். கிட்டத்தட்ட ஒரு வருட காலம் அங்கே இருந்தாக கூறிய முருகன், இடையில் பதினைந்து நாள் விடுமுறை கிடைத்தது ஆனால் அங்கு இருந்து தான் இறங்கிவந்து ரயிலில் மாறி மாறி பயணம் செய்து ஊருக்கு வந்துவிட்டு திரும்ப அவசர அவசரமாக முகாமிற்கு திரும்ப எண்ணினால் கூட பதினைந்து நாள் போதாது ஆகவே கிடைத்த விடுமுறையைக்கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டு பாதுகாப்பு பணியில் இருந்ததாக தெரிவித்தார்.

இப்போது உள்ள எந்த வசதி வாய்ப்பும் இல்லாத சூழ்நிலையில் பனி மலையில் பணியாற்றியதை எண்ணும் போது மகிழ்வாகவே இருக்கிறது என்று கூறிய அவர், தனக்கு மட்டுமில்லை பொதுவாக ராணுவத்தை தேர்வு செய்பவர்களின் இளமைக்காலம் என்பது ராணுவத்திற்காக தியாகம் செய்யப்படும் காலமே என்றார். மேலும் சிலர் பேசுகையில், ராஜஸ்தான் எல்லை என்பது இருபது அடி இடைவெளி கொண்டதாகும். தங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் இருபது அடி இருக்கும் எதிர் எதிரே தாங்களும் அண்டை நாட்டு படையினரும் பார்த்து சிரித்துக் கொண்டாலும் அந்த இருபது அடிக்குள் யார் இறங்கினாலும் தாங்கள் பேசமாட்டோம் துப்பாக்கிதான் பேசும் என்றார். இப்போது ரயிலில் ரிசர்வேஷன் கிடைக்கிறது முன்பெல்லாம் ராணுவத்தினருக்கு சிறப்பு ஓதுக்கீடு கிடையாது கழிவறையில் பயணித்தபடி ஊருக்கு திரும்பிய அனுபவம் எல்லாம் உண்டு என்றார் ஒருவர். தன் மகளிடம் இருந்து வரும் கடிதத்தை ஒரு நாளைக்கு பத்து முறை என்று பல நாள் படித்து தலையனைக்கு அடியில் வைத்துக் கொண்டு இருந்துதாகவும் இப்படிப்பட்ட எல்லை காத்த,காக்கும் படை வீரர்களுக்கு வேண்டியதை செய்து கொடுக்க வேண்டியது அரசாங்க கடமை என்றும் தெரிவித்தனர். 

click me!