
திருநெல்வேலியில் இரயில்வே ஊழியர்களுக்கு டிசம்பர் மாத ஊதியத்தில் இருந்து 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரொக்கமாக முன்பணத்தை வழங்க நடவடிகை எடுக்கப்பட்டுள்ளது.
பழைய ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளதோடு, நாள்தோறும் பல்வேறு பிரச்சனைகளை மக்கள் புதிது புதிதாக சந்தித்து வருகின்றனர்.
தற்போது மாத இறுதி நெருங்குவதால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். அதனை, எப்படி வழங்குவது? என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்துள்ளது அரசு.
ஒவ்வொருவரும் வங்கிக் கணக்குகளில் இருந்து வாரம் ஒன்றுக்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 30 ஆம் தேதி வரை இந்த நடைமுறைக் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிசம்பர் மாதத்துக்கான ஊதியத்தை ரொக்கமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய, மாநில அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தேவைப்பட்டால் ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை முன்பணமாக வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் இரயில்வேயில் பணியாற்றும் ஓட்டுநர்கள், டிக்கெட் பரிசோதகர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு அவர்களின் ஊதியத்துக்கு தகுந்தாற்போல ரூ.8 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரை ஊதியத்தில் இருந்து முன்பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரை கோட்டத்தின் கீழ் உள்ள திருநெல்வேலி பகுதி இரயில்வே ஊழியர்களுக்கு இந்த முன்பணம் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 8 நோட்டுகள் ரூ.2000 ஆகவும், 20 நோட்டுகள் ரூ.100 ஆகவும் வழங்கப்பட்டுள்ளதாக இரயில்வே ஊழியர் வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பளப்பணம் குறைவாக கொடுத்து வயிற்றை பட்டினி போடுவதற்கு, இப்படியாவது கொடுத்தீர்களே என்று இரயில்வே ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.