
காஞ்சீபுரம்
நான்கு ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனதாக நினைத்தவரை, பல கோடி சொத்துக்காக மண்வெட்டியால் அடித்தேக் கொன்று புதைத்த பெண் உள்பட 5 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
காஞ்சீபுரம் டி.கே.நம்பி தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வருவாய்துறை அதிகாரி. வெங்கடாசலம். இவருடைய மகன் எல்லப்பன் (46). கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார்.
எல்லப்பன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவருடைய மனைவி அங்கயற்கன்னி 2006-ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்று தன் தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார்.
எல்லப்பனின் தந்தை இறந்து விட்டதால், அவருடைய தாயார் ராஜலட்சுமியுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் எல்லப்பன் 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென காணாமல் போனார். அதே ஆண்டு மே மாதம் ராஜலட்சுமி இறந்து விட்டார். தாய் இறப்புக்குக் கூட எல்லப்பன் வரவில்லை. அதனால், அவருடைய சித்தப்பா சின்ன காஞ்சீபுரம் காவல் நிலையத்தில் எல்லப்பன் காணாமல் போனது பற்றி புகார் அளித்துள்ளார்.
எல்லப்பனுக்கு காஞ்சீபுரத்தில் 4 வீடுகள், வேலூரில் 1 வீடு, ஏராளமான நகைகள், வங்கியில் ரூ.1 கோடியே 25 இலட்சம் ரொக்கம் உள்பட பல கோடிக்கணக்கில் சொத்துகள் உள்ளன.
மாமனார், மாமியார் இறந்து விட்டதாலும், கணவர் காணாமல் போய் விட்டதாலும் எல்லப்பன் பெயரில் உள்ள சொத்துகளை அங்கயற்கன்னி தன் மகன் பெயருக்கு மாற்ற ஒரு மாதத்துக்கு முன்பு ஏற்பாடு செய்துள்ளார். அப்போது அனைத்து சொத்துகளும் தேன்மொழி என்ற பெயரில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து காஞ்சீபுரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்திடம், அங்கயற்கன்னி சில நாள்களுக்கு முன்பு புகார் அளித்தார். அதன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
எல்லப்பனின் வீட்டில் பல ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்த தேன்மொழியை (56) காவலாளர்கள் நேற்று முன்தினம் கண்டுபிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் சொத்துக்காக தேன்மொழியும், அவருடன் 5 பேர் சேர்ந்து எல்லப்பனை மண்வெட்டியால் அடித்துக் கொன்றுவிட்டு காஞ்சீபுரத்தை அடுத்த குருவிமலை பாலாற்றில் புதைத்தது தெரியவந்தது.
இதனையடுத்து காஞ்சீபுரத்தைச் சேர்ந்த தேன்மொழி, களக்காட்டூரைச் சேர்ந்த செல்லப்பன் (50), ஏழுமலை (55), விச்சந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த வெங்கடகிரி என்கிற கோபி (40), காஞ்சீபுரத்தைச் சேர்ந்த சேகர் (56) ஆகிய ஐந்து பேரையும் காவலாளர்கள் நேற்று கைது செய்தனர்.
பின்னர் எல்லப்பனை கொலைச் செய்து புதைத்த குருவிமலை பாலாற்றில், உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், ஆய்வாளர் லட்சுமிபதி, வாலாஜாபாத் தாசில்தார் சீதாலட்சுமி ஆகியோர் முன்னிலையில் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அங்கு எதுவும் கிடைக்கவில்லை.
பின்னர் காஞ்சீபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் தேன்மொழி உள்பட ஐந்து பேரையும் காவலாளர்காள் சமர்ப்பித்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர், கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட சம்பவம் காஞ்சீபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.