
வண்டலூர்
தமிழ்த் தேர்வை சரியாக எழுதாத சோகத்தில், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் மின்விசிறிக் கம்பியில் தூக்குப்போட்டுத் தற்கொலைச் செய்துக் கொண்டார்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் பாண்டியன் நகர் அவென்யூவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவருடைய மகன் சந்தோஷ் குமார் (18). இவர் கிளாம்பாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த நிலையில், தமிழ் முதல் தாள் தேர்வுக்குச் சென்று தேர்வு எழுதியுள்ளார் சந்தோஷ் குமார்.
தமிழ்த் தேர்வை சரியாக எழுதவில்லை என்பதால், வீட்டுக்கு வந்த சந்தோஷ் குமார் சோர்வுடன் இருந்துள்ளார்.
நேற்று மாலை தனது அறையில் இருந்த சந்தோஷ்குமார் நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர், கதவை திறந்து பார்த்தனர். அப்போது சந்தோஷ் குமார் மின்விசிறிக் கம்பியில் தூக்குப்போட்டுத் தற்கொலைச் செய்துக் கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் காவலாளர்கள் விரைந்துச் சென்று தூக்கில் தொங்கிய சந்தோஷ் குமாரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்த் தேர்வு சரியாக எழுதாததால் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெற்றோர் மற்றும் அவருடைய நண்பர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.