
செங்குன்றம் அருகே, எட்டு நாள்களாகியும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதைக் கண்டித்து கிராம மக்கள் கொசப்பூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வர்தா புயலில் செங்குன்றம், மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் பெரும் சேதமடைந்தன. இப்பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த் நிலையில், கிராமப் பகுதிகளில் தொடர்ந்து 8-வது நாளாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
மேலும், அத்தியாவசியத் தேவையான தண்ணீரின்றியும் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.
இச்சூழ்நிலையில், மின்சாரம் வழங்கக் கோரி, பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கொசப்பூர் சாலையில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாதவரம் பால் பண்ணை ஆய்வாளர் சண்முகசுந்தரம், மின்வாரிய அதிகாரிகள் ஆகியோர் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு விரைந்தனர்.
அப்போது, மின் விநியோகத்துக்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின்பேரில் கிராம மக்கள் மறியலை கைவிட்டனர்.
இதனால், அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்புடன் காணப்பட்டது..