
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் கொரோனா பரவல் காரணமாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் மாதந்தோறும் ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் மூலம் பக்தர்களுக்கு தேவஸ்தானம் அனுமதி அளித்து வருகிறது.
முன்பதிவு டிக்கெட் இணையதளம் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.இதற்காக ஒவ்வொரு மாதமும் 20 ஆம் தேதி அடுத்த மாதத்திற்கான தரிசன டிக்கெட் விநியோகம் தொடங்கப்படும்.தற்போது இலவச தரிசன டிக்கெட்நேரடியாக வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் தினசரி 10,000 இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இண்டிகோ நிறுவனம் தமிழகத்தில் திருச்சி மாவட்டத்திலிருந்து திருப்பதி செல்லும் விமான சேவையை தொடங்கியுள்ளது.ஏற்கனவே பக்தர்களின் கோரிக்கையின் படி இண்டிகோ நிறுவனம் மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து திருப்பதிக்கு தனது விமான சேவையை தொடங்கியது.இந்தநிலையில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்த காரணத்தினால் இடையில் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மூன்றாம் அலை கொரோனா வைரஸ் தாக்கமும் தீவிரமானது.
தற்போது பாதிப்புகள் குறைந்து வருவதால் இண்டிகோ நிறுவனம் விமான சேவையை தொடங்கியுள்ளது. மார்ச் 29&-ந்தேதி முதல் திருச்சியில் இருந்து திருப்பதிக்கு விமான சேவையை மீண்டும் துவங்கும் என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் திருச்சியில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு விமானம் மாலை 5 மணிக்கு திருப்பதி விமான நிலையத்தை சென்றடையும்.
பிறகு அங்கிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும் என்று தெரிவித்துள்ளது.தற்போது அதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளதால் திருப்பதி பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.