சென்னையில் செயல்பட்டு வரும் ஐஐடி வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் நேற்றிரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை கிண்டி அருகே ஐஐடி வளாகம் அமைத்துள்ளது. இங்குள்ள ஐஐடி கட்டிடத்தின் 3வது மாடியில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் கரும்புகை ஏற்பட்டது. இதை பார்த்ததும், அங்கிருந்த காவலாளிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். தீ மளமளவென பரவி, ஐ.சி.எஸ்.ஆர். ஆய்வு கட்டிடத்தில் பரவியது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து கிண்டி, ராஜ்பவன், சைதாப்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்பு நிலையங்களில் இருந்து 5 வாகனங்களில் வந்த வீரர்கள், தீயை அணைத்தனர்.
இரவு நேரம் என்பதால், ஊழியர்கள் யாரும் இல்லாத காரணத்தினால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தில் ஆய்வு கட்டித்தில் உள்ள ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள் என அனைத்தும் தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
புகாரின்படி கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். முதல் கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. ஐஐடி வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.