ரூ.30 ஆயிரம் இலஞ்ச பணத்துக்கு ஆசைப்பட்ட தீயணைப்பு நிலைய அதிகாரி கைது - பொடி வைத்து பிடித்து போலீஸ் அதிரடி...

First Published Mar 27, 2018, 8:58 AM IST
Highlights
fire department officer arrested for bribe Rs.30 thousand


அரியலூர் 

திருமண மண்டபம் கட்டுவதற்கு தடையில்லா சான்றிதழ் கேட்டவரிடம் ரூ.30 ஆயிரம் இலஞ்சம் வாங்கிய செயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அதிகாரியை இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம், செயங்கொண்டம் அருகே உள்ள காட்டாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் அதே ஊரில் திருமண மண்டபம் கட்டுவதற்காக தடையில்லா சான்றிதழ் கேட்டு செயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்தில் விண்ணப்பித்து இருந்தார். 

இந்த தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.30 ஆயிரம் இலஞ்சம் தர வேண்டும் என்று அந்த தீயணைப்பு நிலைய அதிகாரி தமிழ்வாணன் கேட்டுள்ளார். ஆனால், பாலகிருஷ்ணனுக்கு இலஞ்சம் கொடுக்க விருப்பமில்லை. 

எனவே, இதுகுறித்து அரியலூர் மாவட்ட இலஞ்ச ஒழிப்பு காவலாளர்களிடம் புகார் கொடுத்தார்.. இதையடுத்து காவலாளர்கள் அறிவுறுத்தலின்பேரில், இரசாயன பொடி தடவிய ரூ.30 ஆயிரத்தை அரியலூர் அருகில் விளாங்குடி கைகாட்டியில் உள்ள ஒரு தனியார் சிமெண்டு தொழிற்சாலை முன்பாக தமிழ்வாணனிடம், பாலகிருஷ்ணன் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் தமிழ்வாணனை கையும், களவுமாக பிடித்து அங்கேயே கைது செய்தனர். மேலும், அவரிம் கைரேகை பதிந்த ரூபாய் நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

இன்னும் இதுபோல எத்தனை பேரிடம் இலஞ்சம் பெற்றுள்ளார் போன்றவை குறித்து அவரிடம் லஞ்ச ஒழிப்பு காவலாளர்களால் தீவிரமாக விசாரிக்கப்படுகிறது. 

ஓய்வுப் பெறுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழ்வாணன் இலஞ்சம் பெற்று தனது பேரை கெடுத்துக் கொண்டார். 
 

click me!