
நாகர்கோவில்
பிறந்து மூன்று நாள்களே ஆன இரட்டை பெண் குழந்தைகளை ரூ.54 ஆயிரத்துக்கு, இரண்டு வெவ்வெறு நபரிடம் விற்ற கொடூர தாய் மற்றும் அதற்கு துணையாக இருந்தவர் என நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாகர்கோவில் வடசேரி அறுகுவிளையைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்குப் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை பணத்துக்காக விற்பனை செய்தார் என்று தகவல் அதிகாரிகளுக்கு குற்றுச்சாட்டாக வந்தது.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நேற்று சம்பந்தப்பட்ட பெண்ணைச் சந்தித்து விசாரணை நடத்தினர். இதில் குழந்தைகளை விற்பனை செய்தது உண்மைதான் என்று தெரிந்தது.
பின்னர், நடத்திய விசாரணையில், குழந்தைகளை விற்றவர், முத்து என்பவரின் மனைவி நீலாவதி (20) என்பதும், இவர்களின் இரட்டைக் குழந்தைகள் இவர்கள் பெற்றது தான் என்பதும் தெரியவந்தது. நீலாவதிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்ததே இந்த இரட்டை பெண் குழந்தைகள்.
குடும்ப வறுமையால் பிறந்து மூன்று நாள்களே ஆன நிலையில் நீலாவதி ஒரு குழந்தையை ரூ.4 ஆயிரத்துக்கு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், மற்றொரு குழந்தையை தம்மத்துக்கோணத்தைச் சேர்ந்த வனஜா (38) என்பவருக்கு ரூ.50 ஆயிரத்துக்கும் விற்றுள்ளார்.
அந்த குழந்தைகளை விற்க அவருடைய சகோதரிகள் ஈத்தாமொழியைச் சேர்ந்த கலா (22), ஜெயா (40) ஆகியோர் வற்புறுத்தி உள்ளனர். இதனையடுத்து காவலாளர்கள் வனஜாவிடம் விற்கப்பட்ட குழந்தையை மீட்டனர்.
இதுதொடர்பாக காவலாளர்கள் வழக்குப்பதிவுச் செய்து குழந்தைகளை விற்றதாக தாய் நீலாவதி, அவருடைய சகோதரிகள் கலா, ஜெயா மற்றும் குழந்தையை வாங்கிய வனஜா ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.
மீட்கப்பட்ட குழந்தை நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
நீலாவதியிடம் இருந்து ரூ.4 ஆயிரத்துக்கு, மற்றொரு குழந்தையை வாங்கிய தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை காவலாளர்கள் தேடி வருகின்றனர்.