தஞ்சாவூர்
சானூரப்பட்டியில் பயிர்க்காப்பீட்டுத் தொகை கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியி்ன் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பங்கேற்றார்.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகேவுள்ள சானூரப்பட்டியில் செங்கிப்பட்டி, உய்யக்கொண்டான் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பயிர்க் காப்பீட்டு தொகை கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியி்ன் பூதலூர் ஒன்றியச் செயலாளர் இராமச்சந்திரன் தலைமை வகித்தார். கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், காமராஜ், கண்ணகி, துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்தத் தலைவர் நல்லக்கண்ணு பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்திப் பேசினார்.
தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் பாலசுந்தரம், மாநில விவசாய தொழிலாளர் சங்க பொருளாளர் சந்திரகுமார் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்டச் செயலாளர் திருஞானம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் முகில், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வீரமோகன், மாவட்டக்குழு உறுப்பினர் கல்யாணசுந்தரம் மற்றும் பலர் பங்கேற்றனர்.