முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநில கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுக் குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. தொகுதி மறுவரையறை 25 ஆண்டுக்கு ஒத்திவைக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த கட்சிப் பிரதிநிதிகள் அடங்கிய முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்திய அரசு மேற்கொள்ளவுள்ள நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு குறித்தும், அதனால் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் விவாதிப்பதற்காக கடந்த மார்ச் 5ம் தேதியன்று சென்னை, தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, இப்பிரச்சினையினால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களிலுள்ள கட்சிகளின் முக்கியப் பிரதிநிதிகளைக் கொண்டு “கூட்டு நடவடிக்கைக் குழு” அமைத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களையும், அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், அதற்கான முறையான அழைப்பை பல்வேறு மாநிலங்களிலுள்ள முக்கியக் கட்சித் தலைவர்களுக்கு அனுப்பி வைத்திடவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: தொகுதிகள் மறுசீரமைப்பு! மக்களவை சட்டப்பேரவை தொகுதிகளை ஒடிசா இழக்கும்! நவீன் பட்நாயக்!
அதனடிப்படையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுக்கும், முன்னாள் முதலமைச்சர்களுக்கும், அம்மாநிலங்களில் உள்ள பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கும் கடந்த மார்ச் 7ம் தேதி அன்று கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில், நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை என்பது ஒரு தனிப்பட்ட மாநிலத்தின் பிரச்சினைக்கு அப்பாற்பட்டது என்றும், கூட்டாட்சி கொள்கையை இது வெகுவாக பாதிக்கும் என்பதால், இப்பிரச்சினையின் அரசமைப்புரீதியான, சட்ட மற்றும் அரசியல்ரீதியான பரிமாணங்களை பாதிப்புக்குள்ளாகும் மாநிலங்கள் ஒன்றாக இணைத்து ஆராயவேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் தற்போதைய பிரதிநிதித்துவத்தை சதவீத அடிப்படையில் பாதுகாத்திடும் வகையில் உரிய தீர்வுகளை இணைந்து உருவாக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
மேலும், தெற்கில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா; கிழக்கில் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா; வடக்கில் பஞ்சாப் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவில் (JAC) சேர தங்களின் முறையான ஒப்புதலை அளிக்க வேண்டுமென்றும்; கூட்டு நடவடிக்கைக் குழுவில் பணியாற்றவும், ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை வகுக்கவும் பாதிப்புக்குள்ளாகும் மாநிலக் கட்சியிலிருந்து ஒரு மூத்த பிரதிநிதியை நியமிக்க வேண்டுமென்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுக்கும், முன்னாள் முதலமைச்சர்களுக்கும், முக்கியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
அதோடு, மாநிலங்களின் பொருளாதார முன்னுரிமைகள் தேசிய அளவில் உரிய கவனம் பெறுவதை உறுதி செய்வதற்கும், நாம் தனித்தனி அரசியல் அமைப்புகளாக அல்லாமல் நமது மக்களின் எதிர்காலத்தின் பாதுகாவலர்களாக ஒன்றிணைய வேண்டும் என்றும் தெரிவித்து, அதற்கான ஒருங்கிணைந்த செயல்பாட்டின் முதல் கட்டமாக சென்னையில் நடைபெறும் தொடக்கக் கூட்டத்தில் பங்கேற்றிடுமாறும் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.
இதையும் படிங்க: இது எண்ணிக்கை பற்றியது அல்ல! அதிகாரத்தை பற்றியது! முதல்வர் ஸ்டாலின் முழு பேச்சு இதோ!
அதனடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் விடுத்திருந்த அழைப்பினை ஏற்று, இன்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்து முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அகூட்டத்தில் அனைவரையும் வரவேற்று, தொடக்க உரை ஆற்றினார். அதனையடுத்து, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினார். அடுத்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை முன்மொழிந்தார்.
தீர்மானங்கள் விவரம்:
* 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு இதே நடைமுறையை தொடர வேண்டும்.
* மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள், மத்திய அரசின் தொகுதி மறுவரையறையால் தண்டிக்கப்படக் கூடாது. இதை உறுதி செய்ய தேவையான அரசியல் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு செய்ய வேண்டும்.
* மத்திய அரசு தொகுதி மறுவரையறை மேற்கொள்வதற்கு முன்னர், அனைத்து மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள், மாநில அரசுகள் மற்றும் பிற அமைப்பினரை உள்ளடக்கிய ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில், வெளிப்படைத் தன்மையுடன் விரிவாக விவாதிக்க வேண்டும்.
* நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே, நாடாளுமன்றக் குழு பிரதமரைச் சந்தித்து, இந்தக் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சமர்ப்பிக்கும்.
* தொகுதி மறுவரையறை தொடர்பாக, மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்கொள்ள, கூட்டு நடவடிக்கைக் குழுவில் இடம்பெற்றுள்ள கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய மையக் குழு, நாடாளுமன்ற உத்திகளை ஒருங்கிணைத்து செயல்படும்.
* கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள மாநிலங்கள், தொகுதி மறுவரையறைக்கு எதிராக அந்தந்த மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றி, அதை மத்திய அரசுக்கு தெரிவிப்பர்.
* கடந்த காலத்தில் நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வந்த தொகுதி மறுவரையறை விவரங்கள் மற்றும் மத்திய அரசு தற்போது மேற்கொள்ள இருக்கும் தொகுதி மறுவரையறை குறித்த விவரங்களை அந்தந்த மாநில மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளை கூட்டு நடவடிக்கைக் குழு மேற்கொள்ளும் என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.