காதலிக்காவிட்டால் கொன்றுவிடுவேன் - மிரட்டிய ஃபேஸ்புக் நண்பர்; பயத்தில் தீக்குளித்த கல்லூரி மாணவி...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 13, 2018, 2:27 PM IST
Highlights

திருச்சியில் காதலிக்காவிட்டால் குடும்பத்தோடு கொன்றுவிடுவேன் என்று ஃபேஸ்புக் நண்பர் மிரட்டி உள்ளார். இதனால் பயந்துபோன கல்லூரி மாணவி மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். 
 

திருச்சி மாவட்டம், மேலக்கல்கண்டார் கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் சேதுராம். இவர் பொன்மலை இரயில்வே பணிமனையில் ஊழியராக பணியாற்றுகிறார். இவரது மகள் இலக்ஷண்யா (19). இவர் திருச்சியில் உள்ள பஞ்சப்பூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

திருச்சி, அரியமங்கலம், பர்மா காலனி, நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் வினோஜ்குமார். இவரது மகன் விஷால் (19). இவர் தஞ்சை வல்லத்தில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

விஷால் ஃபேஸ்புக் மூலம் இலக்ஷண்யாவின் நட்பு பட்டியலில் சேர்ந்தார். இருவரும் கடந்த ஒரு வருடமாக நட்புடன் பழகி வந்தனர். இந்த நிலையில் தான் இலக்ஷண்யாவை காதலிக்கிறேன் என்றும் தன்னையும் இலக்ஷண்யா காதலிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார் விஷால். ஆனால், இதற்கு இலக்ஷண்யா மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அதற்கு விஷால், "தன்னைக் காதலிக்காவிட்டால் உன்னையும், உன் குடும்பத்தாரையும் கொன்றுவிடுவேன்" என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த இலக்ஷண்யா, நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
 
தீ உடல் முழுவதும் பரவியதால் அலறிய இலக்ஷண்யாவை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அறிந்த இலக்ஷண்யாவின் தந்தை சேதுராம் பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்படி வழக்குப்பதிந்த காவலாளர்கள் விஷாலை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைப்பெற்று வருகிறது.

பெண்ணுக்கு ஃபேஸ்புக் மூலம் அறிமுகமானவர் தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தால் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!