
இராமநாதபுரம்
"ஜெயலலிதாவின் சாதனைகளை சொல்லி உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீதம் அதிமுக வெற்றிப் பெறும்" என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவிததார்.
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் மிளகாய் அரவை ஆலை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழா கூட்டுறவு இணைப்பதிவாளர் முருகேசன் தலைமையில் நடைப்பெற்றது.
இதில், துணைப் பதிவாளர் தங்கப்பன் முன்னிலை வகித்தார். கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ஜமால் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அமைச்சர் மணிகண்டன் மிளகாய் அரவை ஆலையை தொடங்கி வைத்தார்.
அதன்பின்னர் அமைச்சர் மணிகண்டன் செய்தியாளர்களிடம் பேசியது:
"முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இராமநாதபுரத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நடத்த எனக்கு வாய்ப்பளித்தார். அதை நானும் சிறப்பாக நடத்தி முடித்தேன்.
அந்த விழாவில் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு குடிநீர் பிரச்சனையை தீர்க்க வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அதன்படி, இரண்டு நாட்களிலேயே தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இராமநாதபுரத்தில் 57 கண்மாய்கள் நிரப்பப்பட்டுள்ளன. திருவாடானை பகுதிக்கும் தண்ணீர் போதிய அளவு சென்றுள்ளது. இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு இராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினையே வராது.
ஜெயலலிதாவின் சாதனைகளை சொல்லி உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் அ.தி.மு.க. வெற்றி பெறும்" என்று அவர் பேசினார்.