
புதுக்கோட்டை
நெடுஞ்சாலைப் பராமரிப்பு பணிகளை தனியாரிடம் வழங்காமல் அரசு நடத்த வேண்டுமெ ன்று புதுக்கோட்டையில் நெடுஞ்சாலை இயந்திர போக்குவரத்துத் தளவாட பொதுத் தொழிலாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில், நெடுஞ்சாலை இயந்திர போக்குவரத்துத் தளவாட பொதுத் தொழிலாளர்கள் சங்கத்தின் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் கருப்பசாமி தலைமைத் தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில், "நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் உடனடியாக அனைவருக்கும் குறைவில்லாமல் சீருடை, ஒரு ஜோடி காலனி, தையல் கூலி போன்றவற்றை வழங்க வேண்டும்.
துறையில் நாள்தோறும் வாகனங்கள் இயக்கப்படுவதை கணக்கிடுவதற்காக தினசரி பதிவேடுகளை வழங்க வேண்டும்.
நெடுஞ்சாலை பராமரிப்புப் பணிகளை தனியார் வசம் வழங்கும் போக்கை ரத்து செய்து, தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றும் ஓட்டுநர்களுக்கு பதவி உயர்வு இல்லை என்பதால், 5 ஆண்டுகள் பணி முடித்த ஓட்டுநர்களுக்கு கண்காணிப்பாளருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்" போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் பிரபாகரன் அறிக்கை தாக்கல் செய்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயபால், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் ஜெயபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.