கரூர்
கரூரில் நடைப்பெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள், வறட்சி நிவாரணப் பணிகள் மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழக அரசின் பூம்புகார் துறைமுக கழக நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனருமான அண்ணாமலை மற்றும் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் ஆகியோர் கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் மேம்பாடு குறித்தும், வறட்சி நிவாரணப் பணிகள் மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் நேற்று ஆய்வு நடத்தினர்.
அப்போது, குளித்தலை பகுதியில் பொது சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நேரில் ஆய்வு செய்து, கொசு மருந்து அடிக்கப்பட்டதை உறுதி செய்துகொண்டு அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று பொது சுகாதார வளாகம் அமைத்து கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.
மேலும், கரூர் ஊராட்சி ஒன்றியம், வேட்டமங்கலம் ஊராட்சி, குந்தானிபாளையத்தில் சுகாதாரப் பணிகள் மற்றும் குடிநீர் விநியோகம் தொடர்பாக ஆய்வு நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து ஆத்தூர் நத்தமேட்டில் அமைக்கப்பட்ட குளத்தை பார்வையிட்டு மழைநீர் மூலம் சேமிக்கப்பட்ட நீர் இருப்பின் அளவை ஆய்வு செய்தனர்.
பின்னர் திருக்காம்புலியூர் ஊராட்சி மாயனூரில் அமைக்கப்பட்ட அம்மா பூங்காவை பார்வையிட்டனர். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, கோட்டாட்சியர்கள் சரவணமூர்த்தி, விமல்ராஜ், வேளாண் துறை இணை இயக்குனர் பாஸ்கரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.