நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னாள் நீதிபதி கர்ணனை விடுவிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த கர்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். அப்போது அப்போதைய வழக்கு ஒன்றில் தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கர்ணன் தடை உத்தரவு பிறப்பித்தார்.
இதனால் கர்ணன் கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன்கவுல் உள்பட பல நீதிபதிகள் ஊழல் செய்வதாக கர்ணன் பிரதமருக்குக் கடிதம் எழுதினார்.
இவரின் இந்தச் செயல்பாடு, நீதிமன்றத்தை அவமதிப்பதாக கருதி உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. மேலும் கர்ணனை நேரில் ஆஜராகவும் உத்தரவு பிறப்பித்தது.
இதனால் ஆத்த்ரிரமடைந்த கர்ணன் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அமர்வுக்கு எதிரான உத்தரவுகளை பிறப்பித்தார். இதை தொடர்ந்து நீதிபதி கர்ணனின் மனநலம் குறித்து, கொல்கத்தா அரசு மருத்துவர்கள் பரிசோதனை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மனநலப் பரிசோதனைக்கு கர்ணன் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. எனவே உச்சநீதிமன்றத்தை அவமதித்ததால் அவரை கைது செய்ய கொல்கத்தா போலீசாருக்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
ஆனால் நீதிபதி கர்ணனை கைது செய்ய போலீசார் சென்னை வந்த போது அவர் தலைமறைவாகிவிட்டார். இதனைத் தொடர்ந்து 43 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த கர்ணனை நேற்று கொல்கத்தா காவல் துறையினர் கோவையில் கைது செய்தனர். இதனிடையே கர்ணன் கடந்த 12 ஆம் தேதி நீதிபதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இதையடுத்து நேற்று நள்ளிரவு விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்பட்ட கர்ணன் தற்போது காலை 11 மணி விமானத்தில் கொல்கத்தா அழைத்து செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இந்நிலையில், கர்ணன் தரப்பு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கில் கர்ணனுக்கு ஜாமீன் கேட்டு கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் கர்ணன் குறித்த வழக்கில் தங்களால் எதுவும் செய்யமுடியாது எனவும் நீதிமன்ற விடுமுறை நாட்களுக்கு பிறகே 7 பேர் கொண்ட நீதிபதிகள் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வைக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனால் விடுமுறை நாட்கள் முடியும்வரை முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு சிறை வாசம் தான் என உறுதியாகியுள்ளது.