
காசிமேட்டில், சர்க்கு அடிக்க காசு கொடுக்க மறுத்த மனைவியை காதில் இரத்தம் வரும் அளவிற்கு அடித்துக் கொன்ற கணவனை காவலாளர்கள் கைது செய்தனர்.
சென்னை, காசிமேடு, சி.ஜி. காலனி, முதல் தெருவைச் சேர்ந்த மீனவர் இருதயராஜ். இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
இருதயராஜுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் மீன்பிடி தடைக்காலம் முடிந்தும் மீன்பிடித் தொழிலுக்குச் செல்லவில்லையாம்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இருதயராஜ் தனது மனைவியிடம் சாராயம் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு மனைவி நந்தினி “தன்னிடம் பணமில்லை என்று கராராக கூறியதால் இருவருக்கும் இடையே தகராறு முற்றியது. இதில் ஆத்திரமடைந்த இருதயராஜ், நந்தினியை தாறுமாறாக அடித்து உதைத்து, தலை முடியைப் பிடித்து சுவற்றில் மோதியுள்ளார். இதில் நந்தினியின் பின் மண்டையில் பலமாக அடிப்பட்டு காயம் ஏற்பட்டது. மேலும், காதில் இரத்தம் வழிந்தது.
காதில் இரத்தம் வந்ததைப் பார்த்து பயந்துபோன இருதயராஜ், மனைவி நந்தினியை குளியல் அறையில் தள்ளிவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் நடந்த சம்பவம் பற்றி உறவினர்களிடம் கூறினார். அவர்கள் விரைந்து சென்று ஆபத்தான நிலையில் இருந்த நந்தினியை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு நந்தினி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக காசிமேடு காவலாளர்கள் கொலை வழக்கு பதிவு செய்து இருதயராஜை கைது செய்தனர்.