
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடையை மீறி எருதுவிடும் விழா நடைப்பெற்றது. இதில் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையன்று எருது விடும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்காக அனைத்து கிராமங்களிலும் வளர்க்கப்படும் கோவில் காளைகள் ஒரு இடத்திற்கு அழைத்து வரப்பட்டு பூஜைகள் செய்வர்.
பின்னர் மாடுகளில் கயிறு கட்டி அவற்றை ஓடவிட்டு எருதாட்டம் நடைபெறும். இதில் மாடுகள் சீறி பாய்ந்து பொதுமக்கள் கூட்டத்தை நோக்கிச் சென்றன. இதில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று கயிறை பிடித்தபடி மாடுகளை விரட்டி சென்றனர்.
அதன்படி கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலை மேம்பாலம் அருகில் தடையை மீறி எருது விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இந்த போட்டியில் கிருஷ்ணகிரி பழையபேட்டை, சோமார்பேட்டை, கங்கலேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டு அவிழ்த்து விடப்பட்டன.
இந்த காளைகளை பிடிப்பதற்காக ஏராளமான இளைஞர்கள் ஓடினார்கள். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் மற்றும் பக்கத்து மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த எருதாட்ட நிகழ்ச்சியையொட்டி போக்குவரத்தும் மாற்றி அமைக்கப்பட்டது.
மேலும் ஏராளமான காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.