
நாகை அருகே வறட்சி காரணமாக உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு உதவி செய்ய தமிழ்நாட்டில் உள்ள பலரும் உதவ முன்வர வேண்டும் என்று இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சேலம் மாவட்ட முன்னாள் பொறுப்பாளருமான அனுராதா கேட்டுக் கொண்டார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில், குறைவான அளவு செய்யப்பட்டிருந்த சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா பயிர்கள் போதிய தண்ணீர் இல்லாததால் கருகிப் போனதைப் பார்த்து மன உளைச்சலில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர்.
இந்த தகவலறிந்த சேலத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் இலட்சுமண நாராயணன் மற்றும் அவரது மனைவியும், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சேலம் மாவட்ட முன்னாள் பொறுப்பாளருமான அனுராதா ஆகியோர் செவ்வாய்க்கிழமை நாகை மாவட்டத்திற்கு வந்தனர்.
மிகவும் ஏழ்மையான 10 குடும்பங்களுக்கு தலா ரூ.5000 வீதம் ரூ.50 ஆயிரத்தை நேரடியாகச் சென்று வழங்கினர்.
இதுகுறித்து அனுராதா, “இறந்த அனைத்து விவசாயிகளின் குடும்பங்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால், பொருளாதார சூழ்நிலைகள் போதிய அளவு இல்லை. இதேபோல், தமிழ்நாட்டில் உள்ள பலரும் உதவ முன்வர வேண்டும்” என்றுத் தெரிவித்தார்.
இந்த நிதியளிக்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலர் எஸ். சம்பந்தம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் டி. செல்வம், கட்டட தொழிலாளர் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலர் முனுசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் ஏ. நாகராஜன், ஒன்றியத் தலைவர் எம்.எச். பஷீர் அகமது, விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலர் வி. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.