
சேலம்
கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த எஞ்சினியர் மீது டிராக்டர் மோதியதில் பலியானார். சேலம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள், விபத்து அல்ல கொலை என சந்தேகமுள்ளது என்று கூறி எஞ்சினியரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம், வேம்படிதாளம் செம்பாயவளவு பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ்குமார் (24). சிவில் எஞ்சினீயரிங்கில் டிப்ளமோ படித்துள்ளார்.
இவர், சேலம் மாமாங்கம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை கவனிக்கும் வேலைப் பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வேலைக்குச் சென்ற நரேஷ்குமார், அங்கு கட்டுமானப் பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு மணல் ஏற்றி வந்த டிராக்டர் அவர் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை உடன் வேலை செய்த ஊழியர்கள் மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது தொடர்பாக அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதால் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர் விரைந்துச் சென்றனர். ஆனால், சிறிது நேரத்தில் சிகிச்சைப் பலனலிக்காமல் நரேஷ்குமார் உயிரிழந்தார்
இதுகுறித்து தகவலறிந்த சூரமங்கலம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காவலாளர்கள் அவரது உடலைக் கைப்பற்றி உடல் கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், நேற்று காலை நரேஷ்குமாரின் உறவினர்கள் அரசு மருத்துவமனைக்கு திரண்டுவந்து முற்றுகையிட்டனர். பின்னர், அவர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு வந்த ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காவலாளர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது நரேஷ்குமாரின் உறவினர்கள் கூறியது: “கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பின்பக்கமாக வந்த டிராக்டர் நரேஷ்குமார் மீது மோதியதில் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்துவிட்டார்.
நரேஷ்குமார் இறந்தும், கட்டிட உரிமையாளர் இதுவரை வந்து பார்க்கவில்லை. எனவே, அவரது சாவில் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது.
கட்டிடப் பணிகள் நடைபெறும் இடத்தில் கண்காணிப்பு கேமரா உள்ளது. அதில் பதிவான காட்சிகளை நாங்கள் பார்க்க வேண்டும் என்று கூறி அதை கேட்டோம். ஆனால் அவர்கள் அதை தரமறுத்துவிட்டனர்.
இறந்துபோன நரேஷ்குமார் குடும்பத்தினருக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும். அதுவரை அவரது உடலை நாங்கள் வாங்க மாட்டோம்” என்று அவர்கள் கூறினர்.
அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்திச் சமாதானப்படுத்தினர்.