யானை மேல் சவாரி செய்த பாகன் மின்சாரம் தாக்கி பலி – திருமணம் ஆன 10 நாளில் சோகம்

First Published Dec 3, 2016, 1:26 PM IST
Highlights


திருப்பரங்குன்றம் அருகே யானை மேல் அமர்ந்து சென்ற பாகன் மீது மின்சார வயர் உரசியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகர் (24). தல்லாகுளத்தை சேர்ந்த அசோக் என்பவர் வளர்க்கும் யானையின் பாகனாக 10 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது.

இந்நிலையில், நேற்று இரவு சுமார் 7.30 மணிக்கு திருப்பரங்குன்றம், ஹார்விபட்டி பகுதியில் யானையின் மேல் அமர்ந்து கொண்ட ஞானசேகர், அந்த பகுதியில் உள்ள கடைகளில் வசூல் செய்துள்ளார். அப்போது எதிர்பாரதவிதமாக மேலே சென்ற மின் வயர் மீது அவரது உடல் உரசியது. இதனால் அவர் மீதும், யானையின் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

இதையடுத்து யானையின் மீது உட்கார்ந்திருந்த பாகன் ஞானசேகரன் தூக்கி வீசப்பட்டார். யானை தரையில் விழுந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள், அவரை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே இறந்தார்.

இதற்கிடையில், தரையில் விழுந்த யானை திடீரென எழுந்து ஓடி தறிகெட்டு ஓடியது. பின்னர் திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் மரங்கள் இருந்த இடத்தில் நின்றது. துணை பாகன்கள் யானையை மரத்தில் கட்டிப்போட்டனர். இதுகுறித்து திருநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

click me!