நடா புயலில் எதிர்பார்க்கப்பட்ட மழை காணாமல் போய்விட்டது. அடுத்து வர்டா என்ற புயல் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானசாஸ்திர வானிலை ஆராய்ச்சி ஆர்வலர் ந.செல்வகுமார், வானிலை குறித்த தகவலை தெரிவித்துள்ளார். அதில், நடா புயல் சுழற்சியின்போது, நிலப்பரப்பில் நிலவிய இமயமலை குளிரை வெகுவாக ஈர்த்துக்கொண்டது. இதனால், போதிய கடல் சூடு இல்லாமல் மழை குறைந்து பனி பொழிவோடு போய்விட்டது. இது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
இந்நிலையில், மலேசியா - இந்தோனேஷியா இடைப்பட்ட கடல் பரப்பில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது. அது, டிசம்பர் 4ம் தேதி தெற்கு அந்தமான் கடல் பரப்பை வந்தடைந்து, தாழ்வு மண்டலமாக மாறி, தென்கிழக்கு வங்க கடலில் வடகிழக்காக நகர்ந்து புயலாக தீவிரமடையும். அதற்கு பெயர் சூட்டும் வரிசையில் வர்டா என்றழைக்கப்படும்.
இந்தப் புயல் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் தீவிரமடைய வாய்ப்புள்ளது. டிசம்பர் 8, 9, 10 ஆகிய தேதிகளில் கரையை கடக்க வாய்ப்புள்ளது. இது, தற்போது உள்ள சூழலில் ஆந்திரத்தை நோக்கி செல்லும் வாய்ப்புகள் (70 சதவீதம்) அதிகம்.
புதுவை, தமிழக (புதுச்சேரி - சென்னை, நெல்லூர்) பகுதிக்கு வரும் வாய்ப்பு மிகக் குறைவே. இந்தப் புயல் தமிழகத்தை சற்று நெருங்கி வந்தால் பலத்த மழைக்கு வாய்ப்பு ஏற்படும் என்றார்.