தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த 6 மாதங்கள் ஆகும் என்றும் தொகுதி மறுவரை செய்யும் பணிகள் நிறைவடையாதலால் காலதாமதமாகும் காலதாமதமாகும் என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடர்ந்தது. திமுக தாக்கல் செய்த மனுவில், உள்ளாட்சி தேர்தல் நடத்தும்போது 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என்றும் கூறியது. மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் அதில் திமுக கூறியிருந்தது.
தொடர்ந்து வந்த இந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த மனுவை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை விடப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் வழக்கை முழுமையாக விசாரித்து நாங்களே தீர்ப்பு வழங்குவோம் எனக் கூறினர். இதைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் காலதாமதம் ஏன் என்று தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டனர்.
மாநில தேர்தல் கமிஷன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழகத்தல் உள்ளாட்சி தேர்தலை நடத்த 6 மாதங்களாகும் என்றும், தொகுதி மறுவரை செய்யும் பணிகள் நிறைவடையாதலால் காலதாமதமாகும் என்று கூறியது.
விசாரணையின்போது நீதிபதிகள், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் காலதாமதம் செய்வது, தமிழக அரசியலில் குழப்பம் இருப்பதை காட்டுவதாக கூறினர். மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.