பஸ்சுக்குள் புகுந்த மழைநீர்.. குழந்தை உட்பட 8 பேர் தவிப்பு..கோவை அருகே அதிர்ச்சி சம்பவம்

By Raghupati RFirst Published Dec 5, 2021, 8:54 AM IST
Highlights

பஸ்சுக்குள் புகுந்த மழைநீரால், குழந்தை உட்பட 8 பேர் பஸ்சுக்குள் மாட்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கோவையிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 3 மணி முதல் கோவை, உக்கடம், ராமநாதபுரம், கோவில்பாளையம், காந்திபுரம், கவுண் டம்பாளையம், துடியலூர் உள்ளிட்ட பகுதியில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் முடிந்து வீடு திரும்பியவர்கள் அவதிப்பட்டனர்.

2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் சாலை மற்றும் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அவினாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை மற்றும் சத்தி சாலைகளில் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். கோவை ரயில் நிலையம் அருகே லங்கா கார்னர் ரெயில்வே பாலத்தின் கீழ் மழைநீர் தேங்கி நின்றது. அதை பொருட்படுத்தாமல் தனியார் பஸ் ஒன்று முன்னோக்கி சென்றது. அப்போது அந்த பஸ்சுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஏறியது. பாலத்தின் நடுவே வந்த போது பஸ்சுக்குள் தண்ணீர் புகுந்து திடீரென்று நின்றது. டிரைவர் முயற்சி செய்தும் பஸ் புறப்படவில்லை.

பஸ்சுக்குள் தண்ணீர் தேங்கியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். இதில் பஸ்சுக்குள் இருந்த 12 பயணிகள் தண்ணீர் இறங்கி வெளியே வந்தனர். பஸ்சுக்குள் குழந்தை உள்பட 8 பேர் வெளியே வர முடியாமல் தவித்தனர். இது குறித்து தகவலின் பேரில் கோவை தெற்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி சென்று 8 பேரையும் பத்திரமாக மீட்டனர். இதைத்தொடர்ந்து இரவு 7. 30 மணி அளவில் லங்கா கார்னர் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் சிக்கியிருந்த பஸ், பொக்லைன் எந்திரம் மூலம் மீட்கப்பட்டது. மழை நீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த பணிகளை கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்தினர்.இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!