போதைப் பொருள் தயாரித்த ஐந்து பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை - 5 ஆண்டுகால வழக்கின் பரபரப்பு தீர்ப்பு...

First Published Mar 10, 2018, 10:53 AM IST
Highlights
each 20 years prison for Five who produced drugs - judgment


புதுக்கோட்டை

போதைப்பொருள் தயாரித்த ஈரான் நாட்டினர் உள்பட ஐந்து பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை அத்தியாவசிய பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி கிங்ஸ்லி கிறிஸ்டோபர் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.

ஈரான் நாட்டை சேர்ந்த மசூத்மொசாலி (49), முகமது ஜப்ரானி (30) ஆகியோர் கடந்த 2013-ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள சிறுகூடல்பட்டியைச் சேர்ந்த காளியம்மாள் என்பவரது வீட்டை வாடகைக்கு எடுத்து, மெத்தாபெட்டமின் என்ற போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டனர். 

இந்தப் போதைப் பொருட்கள் தயாரிக்க சென்னை இராயபுரத்தை சேர்ந்த சௌக்கத் அலி (55), டெல்லி வடக்கு ஹாராடா பகுதியைச் சேர்ந்த நவ்சத் அத்தார் (38) ஆகியோர் மூலப் பொருட்களை வழங்கினர்.

இந்த நிலையில் மத்திய போதைப் பொருட்கள் தடுப்பு புலனாய்வு பிரிவு காவலாளர்கள் கடந்த 23.3.2013-ஆம் தேதி சிறுகூடல்பட்டியில் ஈரான் நாட்டைச் சேர்ந்த மசூத்மொசாலி, முகமது ஜப்ரானி ஆகியோர் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தினர். 

அப்போது, சுமார் 5.77 கிலோவில் மெத்தாபெட்டமின் போதைப் பொருளும், ஹெராயினும், போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் இருப்பதையும் காவலாளர்கள் கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். 

அவற்றின் அப்போதைய மதிப்பு இந்திய சந்தை மதிப்பில் ரூ.1 கோடி இருக்கும் என்றும், சர்வதேச சந்தை மதிப்பில் ரூ.10 கோடி இருக்கும் என்றும் மத்திய போதைப் பொருட்கள் தடுப்பு புலனாய்வு பிரிவு காவலாளர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து காவலாளர்கள் போதைப் பொருட்கள் தயாரித்தற்காக ஈரான் நாட்டை சேர்ந்த மசூத்மொசாலி, முகமது ஜப்ரானி ஆகியோரையும், சௌக்கத் அலி, நவ்சத் அத்தார் மற்றும் காளியம்மாளையும் கைது செய்து புதுக்கோட்டையில் உள்ள அத்தியாவசிய பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிங்ஸ்லி கிறிஸ்டோபர் நேற்று தீர்ப்பு அளித்தால். அதில், "போதைப் பொருட்கள் தயாரித்தற்காக மசூத்மொசாலி, முகமது ஜப்ரானி, காளியம்மாள், சௌக்கத் அலி, நவ்சத் அத்தார் ஆகிய ஐந்து பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், மேலும் மசூத்மொசாலி, முகமது ஜப்ரானி, காளியம்மாள், சௌக்கத்அலி ஆகிய நால்வருக்கு தலா ரூ.3 இலட்சம் அபராதம் விதித்தும், நவ்சத் அத்தாருக்கு ரூ.2 இலட்சம் அபராதம் விதித்தும்" தீர்ப்பளித்தார். 
 

click me!